Published : 15 Jul 2021 03:14 AM
Last Updated : 15 Jul 2021 03:14 AM

சிவகங்கை எஸ்பி பெயரில் - போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி :

சிவகங்கை

சிவகங்கை எஸ்பி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

முகநூல் (பேஸ்புக்) கணக்கில் உள்ள ஒருவரது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பயன்படுத்தி, அவரது பெயரிலேயே போலியாக முகநூல் கணக்கைத் தொடங்கி அவரது நண்பர்களிடம் பணம் பறிக்கும் முறைகேடு சமீப காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை எஸ்பி டி.செந்தில்குமார் பெயரில் மர்ம நபர் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி, அதில் அவரது புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார். பின்னர் சிவகங்கை கோகலேகால் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு நண்பராக வேண்டுகோள் (பிரண்ட்ஸ் ரெக்வஸ்ட்) விடுத்தார். அவர் எஸ்பி புகைப்படத்தைப் பார்த்தும் அனுமதி கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் சாட்டிங் மூலம் அவசரமாக ரூ.10 ஆயிரம் தருமாறும், உங்களுக்கு கூகுள் பே அல்லது போன் பே கணக்கு இருக்குதா என்றும் கேட்டுள்ளார். இதனால், சந்தேகமடைந்த விஜயகுமார் போலீஸில் புகார் தெரிவிக்கவா என அந்த மர்ம நபரிடம் கேட்டுள்ளார்.

உடனே எஸ்பி டி.செந்தில்குமார் பெயரில் இருந்த போலி முகநூல் கணக்கை மர்ம நபர் அழித்துள்ளார். இதேபோல் மேலும் சிலரிடமும் எஸ்பி பெயரில் போலி முகநூல் மூலம் பணம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்பி டி.செந்தில்குமார் கூறுகையில், ‘எனது பெயரில் முகநூல் மூலம் பணம் கேட்டால், அதனை பிளாக் (தடை) செய்துவிடுங்கள். அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x