Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM

பட்டா வழங்கி 5 ஆண்டுகளாக வீட்டுமனை ஒதுக்காததால் - நயினார்கோவில் அருகே கிராம மக்கள் தர்ணா :

இலவச வீட்டுமனைப்பட்டா கொடுத்து 5 ஆண்டுகளாகியும் இடம் ஒதுக்காததால் நயினார்கோவில் அருகே கிராம மக்கள் தர்ணா செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ளது அக்கிரமேசி கிராமம். இங்கு 450 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 350 சீர்மரபினர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைக்காக அக்கிராமத்தில் 17.84 ஏக்கர் நிலத்தை அரசு 2001-ம் ஆண்டு கையகப்படுத்தியது. பின்னர் 2016-ம் ஆண்டு 350 பேருக்கு தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

ஆனால் கையகப்படுத்திய இடத்தை பட்டாதாரர்கள் யாருக்கும் பிரித்து வழங்க வில்லை. அதனால் இந்த மக்கள் 5 ஆண்டு களாக வீடு கட்ட முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில் பட்டா வைத்துள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தோர், கையகப்படுத்திய நிலத்தில் நின்று நேற்று தர்ணா செய்தனர். கையகப்படுத்திய நிலத்தை அளந்து ஒவ்வொருவருக்கும் வீட்டு மனையைப் பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் கூறும்போது, முதல்வர் நடவடிக்கை எடுத்து வீட்டுமனையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையேல் மக்கள் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x