Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி : ஆணையர் சங்கரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆணையர் சங்கரன் தலைமையில் டெங்கு எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற நகர்நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணையர் சங்கரன் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் டெங்கு எதிர்ப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநகர நல அலுவலர் சித்திரசேனா முன்னிலை வகித்தார். முன்னதாக, சுகாதார அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.

வேலூர் மாநகராட்சி ஆணை யர் சங்கரன் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘ஏடிஎஸ் வகை கொசுக்களால் மழை மற்றும் குளிர் காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஜூலை மாதம் தொடங்கி 3 மாதங்கள் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சாலை மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் தொட்டி, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், சிரட்டை, உடைந்த மண் பானை போன்ற பொருட்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்குவதால் அதில் டெங்கு கொசு உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதால் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை தூய்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் தேக்கி வைப்பதால் எந்த தவறும் இல்லை என பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் தான் டெங்கு வேகமாக பரவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் சுமார் 8,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2020-ம் ஆண்டில் டெங்கு பாதிப்பு 75 சதவீதமாக குறைந்தது.

ஆனால், இந்த தொடக்கத் திலேயே டெங்கு பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவ தாக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர். வேலூரில் இந்த மாதம் டெங்கு தாக்கம் அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

எனவே, வேலூர் மாநகராட்சி யில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கொசு மருந்து தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மெத்தனமாக இருக்காமல் தினசரி பணியில் ஈடுபட வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் டெங்கு பாதிப்பு மிகக்குறைவாக இருந்தது. ஒவ் வொரு பணியாளரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தினசரி மேற்கொள்ளும் பணிகள் குறித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் 300 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x