

ஈரோடு அரசு மருத்துவ மனையில் பிரசவத்தின் போது இறந்த பெண் குழந்தையின் உடலுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கணேஷ் (27). இவரது மனைவி ரமணி பிரசவத்திற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ரமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தையை அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க முடியும் எனக் கூறிய மருத்துவர்கள், சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட கணேஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் இறப்பு குறித்து மருத்துவர்கள் உரிய பதில் அளிக்காததால், கணேஷ் மற்றும் உறவினர்கள் இறந்த பெண் குழந்தை உடலுடன் நியாயம் கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து ஈரோடு கோட்டாட்சியர் பிரேமலதா குழந்தையின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அந்த முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என கோட்டாட்சியர் உறுதி யளித்தார். இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம் பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.