Published : 06 Jul 2021 03:15 AM
Last Updated : 06 Jul 2021 03:15 AM

‘நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ :

திருப்பத்தூர்: மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் இம்மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில் முனைவோர் மாதிரி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக் குழுவினர், மீன் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர், தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம்.

பொது பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய, மாநில அரசின் நிதி உதவியும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு 30 விழுக்காடு நிதியுதவியும் வழங்கப்படும். எனவே, இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புவோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.fisheries.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து, இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x