Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

பாலாற்றின் குறுக்கே புதிதாக 3 தடுப்பணைகள் கட்டப்படும் : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கள் கட்ட ஆய்வு முடிந்துள்ள நிலையில் இந்தாண்டு மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான வணிகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் வரவேற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணா மலை), சட்டப்பேரவை உறுப்பினர் கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக் கட்டு), தேவராஜ் (ஜோலார் பேட்டை), கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), வில்வநாதன் (ஆம்பூர்), நல்லதம்பி (திருப்பத்தூர்), ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்), அமலு விஜயன் (குடியாத்தம்), மு.பெ.கிரி (செங்கம்), அம்பேத் குமார் (வந்தவாசி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், வணிகர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது, ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றுள்ளனர். எனவே, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவறாமல் செலுத்த வேண்டும்.

நியமான தொழில் செய்யும் வணிகர்களுக்கு தமிழக அரசு என்றும் துணையாக இருக்கும். போலியான ஜிஎஸ்டி ரசீது தயாரிக்கும் நபர்களை வணிகர்கள் அடையாளம் கண்டு அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழக அரசின் சிறு, குறு வணிகர்களை, வணிகர் நல வாரியத்தில் ரூ.500 கட்டணம் இல்லாமல் சேர்க்கப் படும்’’ என்றார்.

தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ‘‘தமிழக அரசாங்கத்துக்கு மதுவிலக்கு துறை மற்றும் வணிகவரித் துறை ஆகிய இரண்டு துறைகள் தான் வருவாயை ஈட்டித் தருகிறது. குறிப்பாக, வணிக வரித்துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றால் சுமார் 40 ஆயிரம் கோடி கிடைத்தாலும், அதில் 50 விழுக்காடு கூட வருவாய் கிடைப்பதில்லை.

ஆகையால், தமிழகம் வணிக வரியை நம்பித்தான் உள்ளது. இதை நம்பித்தான் பல திட்டங்களை செய்ய வேண்டும். அரசாங்கத்துக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் வணிகர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.

7 மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் வணிக வரிக்கோட்டம் மிகப்பெரியதாக உள்ளது. இதனை, இரண்டாகப் பிரிக்க வேண்டும். வணிகர்களுக்காக புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும் என கோரி வருகின்றனர். இதை அமைச்சர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் துரைமுருகன் கூறும் போது, ‘‘மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக வரும் 5-ம் தேதி புதுடெல்லி சென்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளேன். தமிழகத் துக்கு ஜல்சக்தி துறைக்கு ஒதுக்கப் பட்டுள்ள 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி போதுமானதாக இல்லை. இது குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசி உரிய நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்காக தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் நோக்கமே வறண்ட பகுதியை செழிப்பான பகுதியாக மாற்றுவதாகும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு 2 அல்லது 3 தடுப்பணைகள் கட்டப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x