

செய்யாறு அடுத்த இருக்கல் மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (34). இவர், அதே பகுதியில் பீப் பக்கோடா கடை நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை மாலை இவரது கடைக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (24), இவரது நண்பரான தவசி கிராமத்தைச் சேர்ந்த தனகுமார் (27), கார்த்தி (24) ஆகியோர் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பின ருக்கு ஆதரவாக மேலும் சிலர் அங்கு வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக அனக் காவூர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தவசி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (30), கிருஷ்ணராஜ் (30), ஜெயராஜ் (23), சதீஷ் (28), அஜீத்குமார் (23), எழிலரசன் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், இளவரசன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர். அதேபோல், தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் தேவேந்திரனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரது சகோதரர் ஏழுமலை உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.