சிவகாசி அருகே - பட்டாசு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு :

சிவகாசி அருகே -  பட்டாசு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு :
Updated on
1 min read

வெடி விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

அதையடுத்து தீயணைப்பு வீரர்கள், எம்.புதுப்பட்டி போலீஸார், சிவகாசி சார்-ஆட்சியர் பிருத்விராஜ், வட்டாட்சியர் ராஜேஷ்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது ஆலையில் வெடி விபத்து ஏதும் நடக்கவில்லை என்பதும், வெடி விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல் பரவியதும் தெரிய வந்தது.

அதையடுத்து குறிப்பிட்ட பட்டாசு ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து சார்-ஆட்சியர் பிருத்விராஜ் ஆய்வு செய்தார். ஆலையில் இருந்த குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு அதனை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் சார்- ஆட்சியர் பிருத்விராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, வெடி விபத்து தொடர்பான தகவல்களை நாம் கவனக் குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது. உடனே சம்பவ இடத்துக்குச் செல்ல வேண்டும். பொதுமக்கள் சரியான தகவல் தெரிவித்து அதிகாரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in