

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகவுரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-2022-ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை வரை rte.tnschools.gov.in இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். எல்.கே.ஜி. சேர்க்கைக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பெற்றோர் இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு கீழ் உள்ள அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். குழந்தைகளின் புகைப் படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்று, மருத்துவமனை, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர், பாதுகாவலரால் வயது நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, பெற்றோர் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதி, வருமானச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.