Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி - தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் :

தனியார் பள்ளிகளில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நேற்று அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலவச கட்டாயக் கல்விச் சட்டம்2009-ன்படி, கோவை, திருப்பூர்மாவட்டங்களில் செயல்பட்டுவரும், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, அவர்கள் சார்ந்த பகுதிகளில் அருகில் (சுமார் ஒரு கிலோ மீட்டர்) நுழைவுநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி அல்லது முதலாம் வகுப்பு) குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டுக்கு, தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) வரும்ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அளிக்கும் பெற்றோர், தங்கள் வீடுகளின் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி அல்லது முதலாம் வகுப்பு எது நுழைவு நிலையோ, அந்த வகுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப் பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு தவறாது வழங்க வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலகம் அல்லது மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அல்லது வட்டாரக் கல்விஅலுவலகங்கள் அல்லது அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறை யில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.

ஒரு புகைப்படம், பிறப்பு சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x