Published : 26 Jun 2021 03:14 AM
Last Updated : 26 Jun 2021 03:14 AM

வேலூர் மாவட்டத்தில் - கரோனா மரபணு வரிசை ஆய்வுக்காக 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு :

கரோனா மரபணு வரிசை ஆய்வுக் காக வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ கத்தில் ஒரே ஒரு நபருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டு அவரும் குணமடைந்து விட்டார் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, கரோனா மரபணு வரிசையை கண்டறியும் பணியின் மூலம் தொற்று பரவலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இரண்டாம் அலை ஏற்பட்டபோது சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் மூலம் சுமார் 70 சதவீதம் பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தமிழகத்தில் டெல்டா வைரஸால் இரண்டாம் அலை வேகமாக பரவியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கரோனா டெல்டா பிளஸ் வைரஸ் குறித்த மரபணு வரிசை குறித்த ஆய்வுக்காக பொது சுகாதார துறை சார்பில், மாவட்டந்தோறும் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கரோனா பாதித்த 30 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து, பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு ரத்த மாதிரிகளை அனுப்பி வைக்க உள்ளனர்.

ஆய்வு முடிவுக்குப் பிறகே டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கம் குறித்து உறுதி செய்யப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x