திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் - ரூ.10,090 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு : திட்ட அறிக்கை வெளியிட்டு ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் -  ரூ.10,090 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு :  திட்ட அறிக்கை வெளியிட்டு ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் (2021-22) ரூ.10,090.85 கோடிக்கு வங்கிகள் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நிகழ் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் கே.வேலாயுதம், உதவி பொது மேலாளர் எஸ்.கங்காதரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் கூறியது: கடன் திட்ட அறிக்கையில், வேளாண்துறைக்கு ரூ.5,619.17 கோடி, குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1,686.52 கோடி, வீட்டுக்கடன் ரூ.1,335.09 கோடி, கல்விக் கடன் ரூ.490.17 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறைக்கு ரூ.91.67 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.170.14 கோடி மற்றும் இதர முன்னுரிமைக் கடன்கள் ரூ.697.55 கோடி என மொத்தம் 10,090.85 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வேளாண் தவணை கடன்கள், சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடன்கள் ஆகியவற்றை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு நிதியுதவி சார்ந்த கடன்களை வங்கிகள் கால வரையறைக்குள் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வங்கியாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) மோகன் கார்த்திக், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சிவராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க.சத்தியநாராயணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in