Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் - கல்வி பயில்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் : நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தல்

கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கொல்லிமலை நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. பிற தனியார் தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதி மாணவ, மாணவியர் அனைவரும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகள் வாரியாக ஒளிப்பரப்பு நேரம் குறித்த விவரங்களை மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கொல்லிமலையில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தொடர்பாக சுகாதாரத் துறையினரிடம், ஆட்சியர் கேட்டறிந்தார்.

மேலும், தொற்றின் தீவிரம் பற்றி தின்னூர் நாடு மக்களிடம் எடுத்துரைத்த ஆட்சியர் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது, நாமக்கல் கோட்டாட்சியர் எம்.கோட்டைக்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அ. மாதேஸ்வரி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ப.ராமசாமி உள்ளிட்டோர் உடனிந்தனர்.கொல்லிமலை தின்னனுார் நாடு கிராம மக்களிடம் கரோனா தொற்று தொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x