கடன் திட்டங்களில் பயன் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் :

கடன் திட்டங்களில் பயன் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

2021- 22-ம் ஆண்டுக்கு திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப் புறமாக இருந்தால் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.

கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண் களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

சுய உதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலை யங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ரூ.30 லட்சம் வரை மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர், கடன் விண்ணப்பங்களை பெற்று, நிறைவு செய்து உரிய ஆவணங் களுடன் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in