Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

கரூர் மாவட்டத்தில் விற்பனையை அதிகரிக்க - 10 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை :

கரூர்

கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 10 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறக்கப்பட உள்ளன.

கரூர் தோரணக்கல்பட்டியில் 50,000 லிட்டர் பால் குளிரூட்டும் வசதியுடன் ஆவின் பால் குளி ரூட்டும் நிலையம் செயல்பட்டு வந்தது. பின்னர், கரூர் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பால் குளிரூட்டும் வசதி மட்டுமே உள்ள நிலையில், பால் பாக்கெட் போடும் வசதியோ, பால் பொருட்கள் தயாரிக்கும் வசதியோ கிடையாது.

கரூர் மாவட்டத்தில் கொள் முதல் செய்யப்படும் 78,000 லிட்டர் பாலில் 50,000 லிட்டர் சென்னைக்கும், 10,000 லிட்டர் ஈரோடுக்கும் அனுப்பப்படுகிறது. திருச்சி ஆவினிலிருந்து கரூர் மாவட்டத்துக்கு பால் பாக்கெட்கள் கொண்டு வரப்படுவதால், அங்கு 5,000 லிட்டர் அனுப்பப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் நுகர்வு 5,500 லிட்டராக இருந்த நிலையில், அண்மையில் பால் விலை குறைக்கப்பட்டதால் 6,500 லிட்டராக உயர்ந்தது. தொடர்ந்து, ஆவின் பால் விற்பனையை உயர்த்தவும், ஆவின் பால் பொருட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் வகையிலும், கரூர் நகரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியின் உள்ளே மற்றும் வெளியில் தலா 1, தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், உழவர் சந்தை எதிரே உள்ள ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, வெள்ளியணை, தோகைமலை, பள்ளபட்டி ஆகிய இடங்களில் தலா 1 என தலா ரூ.5.50 லட்சம் செலவில் 10 ஆவின் பாலகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஆவின் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இதுதொடர்பாக, கரூர் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றிய பொதுமேலாளர் ஏ.பி.நடராஜன் கூறியபோது, “கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக ஆவின் பாலகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா ஊரடங்கால் பணிகள் தடை பட்டுள்ள நிலையில், முதற்கட் டமாக கரூரில் ஓரிரண்டு பாலகங்கள் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x