நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.7,810 கோடி கடன் வழங்க இலக்கு : கடன் திட்ட அறிக்கை வெளியிட்டு ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.7,810 கோடி கடன் வழங்க இலக்கு :  கடன் திட்ட அறிக்கை வெளியிட்டு ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021-22-ம் ஆண்டிற்கான ரூ.7,810 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்து கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021- 22-ம் ஆண்டிற்கு ரூ.7,810 கோடி அளவில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3,793.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு ஒதுக்கீட்டைக்காட்டிலும் ரூ.222.12 கோடி அதிகமாகும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.992.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற முன்னுரிமைக்கடன் திட்டங்களுக்காக ரூ.2053.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த கடன் அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.5,059.51 கோடியாகும்.

இதில் கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.2457.08 கோடியும், கிராம வங்கிகளின் பங்கு ரூ.246.95 கோடியும், இதர சிறு வங்கிகளின் பங்கு ரூ.46.46 கோடியாகவும் உள்ளது. தொடர்ந்து கடன் திட்டத்தை திட்டமிட்டப்படி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திட்ட அறிக்கையின் முதல் பிரதியை இந்தியன் வங்கியின் உதவி பொதுமேலாளர் செந்தில்வேல் வெளியிட்டார். அதனை நபார்டு திட்ட இயக்குநர் பிரியா பெற்றுக் கொண்டார். இந்தியன் வங்கியின் சேலம் மண்டல உயர் அதிகாரிகள், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலர் பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in