

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குறைந்த அளவு நீரை பயன்படுத்தி பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன், பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டத்துக்கு நடப்பாண்டில் வேளாண் பயிர்களில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவுவான் அமைக்க 1,300 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.5.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு, சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் சொட்டுநீர் பாசனமும், பயறுவகைகள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு தெளிப்பு நீர், மழைத்தூவுவானும் அமைத்து பாசனம் செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான குழாய்கள் பதிக்க, பள்ளம் தோண்டும் பணிகளுக்காக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
நுண்ணீர் பாசனம் பெறுவதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.
விண்ணப்பத்துடன் விவசாயிகள் பட்டா நகல், சிட்டா நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் நகல், நில வரைபடம், மண் மற்றும் நீர் பகுப்பாய்வு சான்று மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கான சான்று இணைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.