Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
ஈரோடு கனிஜவுளிச்சந்தை புதிய வணிக வளாகத்தில், கடை ஒதுக்குவதில் 40 ஆண்டுகால உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு கனிஜவுளிச்சந்தை தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நூர்முகமது, வாரச்சந்தை தலைவர் செல்வராஜ் ஆகியோர் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில் கடந்த 40 ஆண்டுகளாக ஈ.கே.எம். அப்துல் கனி மார்க்கெட் (ஜவுளிச் சந்தை) இயங்கி வருகிறது. இங்கு 230 தினசரி ஜவுளி வியாபார கடைகள், 200-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகள் இயங்கி வருகிறது. மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் கலந்து செய்து வருகிறோம்.
ஈரோடு, வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், சிவகிரி, சென்னிமலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் இருந்து சிறு, குறு ஜவுளி வியாபாரிகள் 40 ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். 2 ஆயிரம் குடும்பங்கள் ஜவுளித் தொழிலை நம்பி வாழ்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பஞ்சு விலை ஏற்றம், ஜவுளி விலையேற்றம் போன்றவற்றால் ஜவுளி விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களது கடைகளுக்கு கரோனா காலத்திலும் வாடகை பாக்கி இல்லாமல் மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளோம்.
இந்நிலையில், கனிமார்க்கெட் வளாகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வணிக வளாகத்தில் 40 ஆண்டுகாலமாக சங்கத்தின் உறுப்பினர்களாக, சந்தையில் விற்பனை செய்து வரும் ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து, முதல் தளம், இரண்டாம் தளத்தில் கடைகளை வழங்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில், இதற்கு வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர்.
இந்த உறுதிக்கேற்ப வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அதேபோல், பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கும், வணிக வளாகம் சார்ந்து வியாபாரம் செய்ய கடைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT