மனைவியை கொன்று நகை பறிப்பு என நாடகமாடிய கணவர் கைது :

மனைவியை கொன்று நகை பறிப்பு என நாடகமாடிய கணவர் கைது :
Updated on
1 min read

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கொலை செய்து செயின் பறிப்பு சம்பவம் போல் நாடகமாடிய கணவரை குமார பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (30). கோபியில் உள்ள தேசிய வங்கியில் தற்காலிக ஊழியர். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தரணிதேவி (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கவின் பிரசன்னா (2) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதமாக தரணிதேவி தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலை யில், மனைவியை சமாதானம் செய்த சபரிநாதன் நேற்று முன்தினம் குழந்தையை விட்டுவிட்டு மனைவியை காரில் அந்தியூர் அழைத்துச் சென்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகே கோட்டைமேடு மேம்பாலம் பகுதியில் சென்றபோது, காரை வழிமறித்த அடை யாளம் தெரியாத நபர்கள் தங்களை தாக்கி 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற தாகவும், தாக்குதலில் தரணி தேவி உயிரிழந்ததாகவும் குமார பாளையம் போலீஸில் சபரிநாதன் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், சபரிநாதன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேக மடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:

ஆத்தூரில் இருந்து மனைவியை, சபரிநாதன் காரில் அழைத்து வந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சபரிநாதன் குமாரபாளையம் கோட்டைமேட்டில் காரை நிறுத்தி மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை கழற்றிவிட்டு செயின் பறிப்பு சம்பவம் போல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சபரிநாதனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை, கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in