Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

கரோனாவால் ரிக் தொழில் பாதிப்பு கடன் செலுத்த அவகாசம் வேண்டும் : ரிக் உரிமையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் போர்வெல் தொழில் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில இந்திய ரிக் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரிக் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வங்கிக் கடன் மூலம் வாங்கி தொழில் செய்து வருகிறோம். கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டு காலமாக வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

ரிக் வாகனங்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை இருப்பது இல்லை. சீசனுக்கு மட்டுமே வாகனங் களை இயக்க முடியும். கடந்த ஆண்டு கரோனா பரவலால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்கிறது. இதனால் ரிக் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வங்கிக் கடன் தவணைத் தொகையைசெலுத்த ஓராண்டு கால அவகாசம் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் டீசல் விலை உயர்வு ரிக் தொழிலை பாதிக்கிறது. விவசாயத்துக்கும், நாடு பசுமையாக திகழ்வதற்கும் ரிக் தொழில் தான் முக்கிய காரணமாக உள்ளது.

எனவே, டீசல், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அல்லது விவசாய பயன்பாட்டுக்கான போர்வெல் அமைக்க மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x