Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

வெங்காய மூட்டைக்கு அடியில் வைத்து கடத்திய - ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் :

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் பெட்டிகள்.

கோவை

கர்நாடகாவிலிருந்து வெங்காய மூட்டைக்கு அடியில் வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட இடையர்பாளையம் பகுதியில், தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு செல்லும் காட்டுப்பாதையில் லாரியில் வைத்து கர்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்று சுல்தான்பேட்டை போலீஸார் ஆய்வு செய்ததில், அங்கு 12 சக்கர லாரி ஒன்று நின்று கொண்டிருப்பது தெரிந்தது. போலீஸாரை பார்த்ததும் லாரியின் ஓட்டுநர் தப்பியோடினார். விசாரணையில், அந்த லாரி ஈரோடு மாவட்டம் பவானி கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.பழனிசாமி என்பவருக்கு சொந்தமானது என்பதும், கர்நாடக மாநிலத்திலிருந்து பெரிய வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு ஏற்றி வரும்போது, மூட்டைகளுக்கு அடியில் மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லாரி, ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 786 மதுபாட்டில்கள், 35 லிட்டர் அளவு கொண்ட ஒரே மதுபாட்டில் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “லாரியை சேலம் சங்ககிரி வடுகபட்டி மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x