Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் - கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தொற்று கண்டறியும் பணியை ஆட்சியர் ஆய்வு :

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று காய்ச்சல், சளி உள்ளதா என கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தன்னார்வலருக்கு 100 வீடுகள் என்ற அடிப்படையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பேரூராட்சி, கூனவேலம்பட்டி ஊராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு கணக்கீடும் முறை, உடல் வெப்பநிலை கணக்கீடு செய்வதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதுபோல் ராசிபுரம் ஒன்றியம் கோனேரிப்பட்டி, காக்காவேரி, வேலம்பாளையம் மற்றும் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x