

விழுப்புரம் தனியார் பள்ளியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் விசாரணை நடைபெற்றது.
கரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 70 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களின் பெற்றோர் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ஆட்சியர் அண்ணாதுரையின் உத்தரவின் பேரில் நேற்று உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) திருமாறன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியில் சுமார் 3 மணி நேரம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை விவரம், கடந்த ஆண்டு கல்வி கட்டணம் செலுத்தப்பட்ட மாணவர்களின் விவரம், கல்வி கட்டணம் பெற்றதற்கான ஆவணங்கள், மற்ற பள்ளிகளிலும், இந்த பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம் ஆகியவை குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆய்வுக்கு சென்ற அலுவலர்களிடம் கேட்டபோது, " கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணை முடிந்ததும் அதன் விசாரணை அறிக்கை ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.