Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
மீன்பிடித் தடைகாலம் வரும் 14-ம் தேதி முடிவடைவதால் ராமேசுவரம் கடலோரப் பகுதியில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.இந்த ஆண்டு தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்திலிருந்து எஸ்.பி. பட்டினம் வரையிலும் பாக் ஜலசந்தி கடலிலும், தனுஷ்கோடியிலிருந்து கன்னிராஜபுரம் வரையிலும் மன்னார் வளைகுடா கடலிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் விசைப் படகுகளில் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. படகுகள் அனைத்தும் கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக தடைக் காலத்தின்போது மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளில் பராமரிப்புப் பணியையும், வலை பின்னும் பணியையும் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்க அடுத்தடுத்து முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டதால் மீனவர்களால் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
வரும் 14-ம் தேதியுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த 7-ம் தேதியிலிருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ராமேசுவரம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் இன்ஜின் பழுது நீக்குதல், தச்சுப் பணிகள் மற்றும் மராமத்து உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மீனவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT