Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை செய்த - 20 தனியார் ஆய்வகங்களுக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் :

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை மேற்கொண்ட 20 தனியார் ஆய்வகங்களுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சில தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சில தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பரிசோதனை முடிவுகளை சுகாதாரப் பணிகள் அலுவலகத்துக்கு தெரிவிப்பதில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, தொடர்புடைய ஆய்வகங்களுக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறியதாவது:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெறாமல் மாவட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

அவ்வாறு பரிசோதனை செய்த 20 தனியார் ஆய்வகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை செய்தால், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x