Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

கரோனா அறிகுறிக்கு மருந்துக் கடைகளில் - மாத்திரை வாங்குவோரின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க அறிவுறுத்தல் :

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் கரோனா தொற்று அறிகுறிக்கு மருந்து வாங்குபவர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மருந்துக் கடை உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் சாரதா பாலமந்திர் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து வாங்க அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். கரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி போன்றவற்றுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க வருபவர்களது பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பெற்ற பின்னரே மருந்துகளை வழங்க வேண்டும்.

அவர்களிடம் பெறப்படும் விவரங்களை அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் அல்லது மாநகராட்சி அலுவலர்களுக்கு feverscmccorp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.

மருந்துக் கடைகள் முறையாக விவரங்களை அனுப்புவதை மாநகராட்சியின் சுகாதார அலுவலர்களும், மருந்தாளுநர்களும் கண்காணிக்க வேண்டும்.

மருந்து விற்பனை நிலையங்கள் இதுதொடர்பான தகவல்களுக்கு சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரனை 98420 65732 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மருந்துக் கடை உரிமையாளர்கள் இத்தகவலை உடனுக்குடன் தெரிவிப்பதன் மூலம் கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, காலம் தாழ்த்தாமல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தேவையானவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்கலாம். எனவே, மருந்து விற்பனை நிலையங்கள் தொற்று பரவலை தடுக்க மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், மருந்து ஆய்வாளர்கள் மாரிமுத்து (சேலம்), ரேகா (சூரமங்கலம்), சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், மருந்து விற்பனை வணிக சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x