Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

திருப்பத்தூரில் விவசாயி கொலை :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தேமுதிக மாவட்ட செயலாளரின் சகோதரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(45) இவர் திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளராக உள்ளார். இவருடைய சகோதரர் மாதேஸ்வரன்(48) விவசாயி.

இந்நிலையில், ஹரிகிருஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானவேல்( 22) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் காலை தகராறு ஏற்பட்டது. பின்னர் அன்று மாலை ஹரிகிருஷ்ணனின் மனைவி அருணா அந்த பகுதியில் உள்ள கோயில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஞானவேல் மற்றும் அவருடைய நண்பர்கள் கதிர்வேல்( 20 ) துளசி( 27) சந்தோஷ்( 25) ஆகியோர் அருணாவிடம் தகராறு செய்துள்ளனர். சத்தம் கேட்டதும் ஹரிகிருஷ்ணனின் சகோதரர் மாதேஸ்வரன் அங்கு சென்று, ஞானவேலிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த ஞானவேல் மற்றும் அவருடைய நண்பர்கள் ஒன்று சேர்ந்து மாதேஸ்வரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மாதேஸ்வரனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாதேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஞானவேல், கதிர்வேல், துளசி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சந்தோஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x