Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
ஈரோடு: கொடுமுடி அருகே கிராவல் மண் கடத்திய லாரியை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, லாரியை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பியோடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாமரைப் பாளையம் பகுதியில் நேற்று காலை ஈரோடு மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் சத்யசீலன், ஜெகதீஷ், உதவி புவியியலாளர் சிலம்பரசன் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். லாரியை கொடுமுடி அடுத்த இச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் (35) ஓட்டி வந்ததும், அவர் லாரியில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், லாரியை கொடுமுடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். லாரியில் கவுதமுடன், கனிம வளத்துறை அதிகாரி சிலம்பரசன் உடன் சென்றார். லாரிக்கு பின்னால் மற்ற அதிகாரிகள் ஜீப்பில் சென்றனர். கொடுமுடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்றபோது, கவுதம் வேண்டுமென்றே இடதுபுறம் உள்ள பள்ளத்தில் லாரியை திருப்பி கவிழ்த்தார். அதன்பின்னர் அதிகாரிகளை மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். லாரியில் வந்த கனிம வளத்துறை அதிகாரி சிலம்பரசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
கொடுமுடி போலீஸார் நடத்திய விசாரணையில், கவுதம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதும், ஓராண்டுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளதும் தெரியவந்தது. கொடுமுடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கவுதமைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT