Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல் இருப்பது, தடுப்பூசிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்றவைகளை தமிழகத்துக்கு நியாயமான அளவில் ஒதுக்காமல் இருப்பது, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இதன்படி மாநிலம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.கருணாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT