Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

அதிமுகவை வழி நடத்துவதே என் ஆசை : அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேச்சு :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா செல்போனில் நேற்று பேசினார். இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், ``தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. தற்போது கட்சி தலைமை இல்லாமல் இருக்கிறது. தலைமை ஏற்பதற்கு வரவேண்டும்'' என வின்சென்ட் ராஜா சசிகலாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு, `வருவேன், எல்லாருடைய மனக்குமுறலும் தெரிகிறது, நானும் மன வருத்தத்தில்தான் உள்ளேன். தொண்டர்களுக்கு கடிதம் எழுதலாம் என்றால், கரோனா காலமாக இருப்பதால் கடிதம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அதனால்தான் ஒவ்வொருவரிடமும் போனில் பேசி வருகிறேன்' என சசிகலா பதிலளிக்கிறார்.

உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை. கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காலம் அதிமுகவைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உங்களைப்போன்ற தலைமை வேண்டுமென வின்சென்ட் ராஜா கூறுகிறார்.

அதையடுத்து, `நண்பர்களுடன் சேர்ந்து இந்த கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என சசிகலா கூறுகிறார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x