Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை :

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 10 நிமிடம் நீடித்த இந்த மழையால், சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. இதுபோல மூன்றடைப்பு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 133.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 614 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் சிறிது நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் தொடர்ந்து வெயிலடித்ததுடன் காற்றும் பலமாக வீசியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் வானில் கருமேகங்கள் திரண்டன. சுமார் 4 மணிக்கு லேசாக பெய்யத் தொடங்கிய மழை இடி, மின்னலுடன் பலத்த மழையாக மாறியது. சுமார் 5.15 வரை நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று. காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x