Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் முகாம்கள் நிறுத்தம் : ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற பொதுமக்கள்

வேலூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. மாவட்டத்தில் தற்போது கரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. மாவட் டத்துக்கு 7 ஆயிரம் தடுப்பூசிகள் கடந்த வாரம் வரப்பெற்றன.

இவை அனைத்தும் சிறப்பு முகாம்கள் மூலம் போடப்பட்டு தீர்ந்துவிட்டதால் முகாம்கள் அனைத்தும் நேற்று நிறுத்தப் பட்டுள்ளன. மேலும், சிலர் பணம் கொடுத்தாவது தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சென்றுள்ளனர். அங்கும் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த இரண்டு நாட்களாக இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசிடம் இருந்து வரப்பெற்ற தடுப்பூசி அனைத்தும் தீர்ந்து விட்டன. இனிமேல் தடுப்பூசி வந்தால்தான் போட முடியும். ஓரிரு நாள் ஆகலாம் என்று கூறுகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசி செலுத்தும் முகாம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக, முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதை யடுத்து தடுப்பூசி செலுத்துவதில் தளர்வுகளை அளித்து முதிய வர்கள், 45 வயது முதல் உள்ள வர்கள் மற்றும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அடுத்தடுத்து அனுமதி வழங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த 2 வாரமாக நடைபெற்றது. இந்நிலையில் தடுப்பூசியின் இருப்பு முற்றிலும் காலியானதால் கடந்த 6-ம் தேதி முதல் 3-வது நாளாக நேற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தடைப் பட்டுள்ளது. இதனால், முகாம்கள் நடைபெற்ற இடங்களுக்கு வருகை தரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். திருவண் ணாமலை மாவட்டத்துக்கு மீண்டும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பிறகுதான், அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் 3 நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் கிடைத்துவிடும். அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கும். இதில், 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x