Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

வங்கி, நிதி நிறுவன கடனை செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் :

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மே 24 முதல் ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்தது. தொடர்ந்து, நேற்று முதல் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன்பெற்ற மக்களிடம் கடன் தவணைத் தொகை மற்றும் வட்டித் தொகையை உடனடியாக செலுத்தக் கோரி வற்புறுத்தக்கூடாது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கியுள்ள வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, கடினப் போக்கைத் தவிர்த்து கடனை வசூலிக்க வேண்டும்.

மேலும், இந்த கரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில், மகளிர் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் வங்கிகள் தகுதியுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான அளவு வங்கிக் கடன் வழங்க வேண்டும். கடன் வசூலிப்பது சம்பந்தமாக நிறுவனங்கள் மீது புகார் எழுந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்... இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்ந்த குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்று நுண்கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் புகார் ஏதேனும் இருந்தால் 18001021080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x