Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் : நிவாரணம் பெற ஜூன் 11 முதல் டோக்கன் விநியோகம்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8 முதல் 12 மணிவரை ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் நேற்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத்தின் 2-ம் தவணைத் தொகை ரூ.2,000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள் தொகுப்பு ஆகியவை ஜூன் 15-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

இதற்காக ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகலில் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க வேண்டும். அதே நேரம் ஜூன் 11 முதல் 14 வரை காலை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம் போல குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x