Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
சென்னை அம்பத்தூர் பகுதியில் உணவு டெலிவரி செய்வதுபோல் நடித்து இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் பகுதியில் வீடு, கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர்கள் இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக திருடு போன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, புதூர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துக்கு எந்த ஆவணமும் இல்லை. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீஸார் அவரை பிடித்து அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டவர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் கங்கை நகரைச் சேர்ந்த ஜோசப் என்பதும், இவர் ஏற்கெனவே ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு சப்ளை செய்யும் ஊழியர் என்பதும் தெரியவந்தது. உணவு டெலிவரிக்காக செல்லும்போது நோட்டமிட்டு வாகனங்களை திருடி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT