Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

அத்தியாவசிய தேவையின்றி சுற்றியதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது - போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் : சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ; 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை சேத்துப்பட்டில் அத்தி யாவசிய தேவையின்றி சுற்றி யதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது, போக்குவரத்து போலீஸாரிடம் பெண் வழக்கறிஞர் ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீஸார் தொடர்புடைய பெண் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று காலை சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஆனந்த், பிரபாகரன், ரஞ்சித் குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேத்துப்பட்டு குருசாமி பாலத்திலிருந்து நுங்கம்பாக்கம் வழியாக வந்த காரை நிறுத்தி தணிக்கை செய்தனர். காரில் இருந்த பெண்ணை விசாரித்தபோது, அவர் மீன் வாங்க மெரினா கடற்கரைக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து, “அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல அனுமதி இல்லை. எனவே, உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உங்களுடைய வாகன ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வேண்டும்” என போலீஸார் கூறியுள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்ய முயன்றனர்.

இதைத்தொடர்ந்து அப் பெண், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், செல்போன் மூலம் தனது வீட்டுக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் சொகுசு காரில் வந்த அவரது தாயார் போலீஸாரை கடுமையாக விமர்சித்தார்.

“எனது மகளின் காரை எப்படி நிறுத்தலாம், நான் யார் தெரியுமா? வழக்கறிஞர், வாயை மூடு. நான் நினைத்தால் உங்களை வேலையை விட்டு நீக்க முடியும்” என கடுமையான வார்த்தைகளால் போலீஸாரை வசைபாடினார். பின்னர், போலீஸாரின் பேச்சையும் மீறி மகள் ஓட்டிச் சென்ற காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அபராதத் தொகைக்கான ரசீதையும் தூக்கி எறிந்தார்.

போக்குவரத்து தலைமைக் காவலர் ரஞ்சித் குமார் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, தொடர்புடைய பெண் வழக்கறிஞர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது கீழ்பாக்கம், லேண்டன்ஸ் சாலையைச் சேர்ந்த தனுஜா (52) எனத் தெரியவந்ததாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் ஜூலியஸ் கிறிஸ்டோபர் கூறியதாவது: கரோனா பணியில் காவலர்கள் முன்களப் பணியாளர்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி புரிகிறோம். கரோனாவால் எங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். காவல் துறையினரின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் பணியில் இருக்கும்போது ஒரு சிலரின் செயல்பாடு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மக்களுக்காகத்தான் நாங்கள் களத்தில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளித்தாலே போதும்” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வர்க்கீஸ் கூறும்போது, “ஊரடங்கால் பலர் வாழ்வாதாரம் இழந்துள் ளனர். இதனால் சிலர் ஊரடங்கை மீறுவதை சட்டம் கொண்டு பார்க்காமல் மனசாட்சியுடன் அணுக வேண்டும். காவல்துறையினரின் பணி ஊரடங்கில் மெச்சத் தகுந்ததாக உள்ளது. ஊரடங்கில் அனைவரும் கட்டுப்பாடு மற்றும் பொறுமையை கையாள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x