

ஈரோடு: அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு டிஏபி உரம் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசின் உரமானிய கொள்கையின் அடிப்படையில், டிஏபி உரத்தின் விற்பனை விலை அதிகபட்சமாக, மூட்டைக்கு ரூ.1200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சில்லரை உரம் விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் விநியோகம் செய்யப்படுவதனால், விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்கு செல்லும்போது ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகள் கட்டாயம் ரசீது கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
உரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) மற்றும் வட்டார உர ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.