

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமார் (39). இவர், கடந்த 1-ம் தேதி திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். பிறகு, அங்கிருந்து ஏலகிரி மலைக்கு அவர் திரும்பினார்.
ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் மேம்பாலம் வழியாக வந்த போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.