Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் - சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவாளர்கள் : தொற்று பரவல் அதிகரிக்கும் என சுகாதார துறையினர் அச்சம்

திருவண்ணாமலை

கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுடன் வரும் ஆதர வாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறி வருவதால் தொற்று பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவித் துள்ளனர்.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, தி.மலை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில் சிறப்பு முகாம் களை தொடங்கி வைக்க ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் முனைப்பு காட்டுகின்றனர். இதையொட்டி, முகாம் நடை பெறும் இடத்துக்கு வரும் சிறப்பு அழைப்பாளர்களுடன், அவர்களது ஆதரவாளர்களும் அதிகளவில் வருகின்றனர். அவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. இதனால், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “தடுப்பூசி செலுத்தப்படும் சிறப்பு முகாமை தொடங்கி வைக்க மக்கள் பிரதி நிதிகள் வருகின்றனர். அவர்களுடன், அவர்களது ஆதரவாளர்களும் வருகின்றனர். முகக் கவசத்தை மக்கள் பிரதிநிதிகள் அணிந்திருந்தாலும், அவர்களது ஆதரவாளர்களில் பலரும், முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்த பிறகுதான் முகக்கவசங்களை அணிந்து கொள்கின்றனர். மேலும், அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இடித்துக் கொண்டு நிற்கின்றனர். இதனால், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, சிறப்பு முகாமை தொடங்கி வைக்கவும் மற்றும் ஆய்வு செய்ய வரும் மக்கள் பிரதிநிதிகள், ஓரிரு நபர்களை மட்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் மையங்களுக்கு வந்து சென்றால், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும். அதன் மூலம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் இருக்கலாம்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x