Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM

வேலூர் மாவட்டத்தில் கையிருப்பு குறைந்ததால் - 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் குறைப்பு :

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு குறைந்ததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 18 முதல் 44 வயதுக்குள் இருப்பவர்களுக்கு கடந்த 24-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 22 ஆயிரம் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி வரப்பெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி 6 நாட்களில் மட்டும் 18,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தற்போது 1,500 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி யின் இருப்பும் குறைந்துள்ளது. இதனால். 18 முதல் 44 வயதினருக்கான முதல் தடுப்பூசி போடும் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வரப்பெற்ற பிறகு மீண்டும் தொடங்க உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் முகாம் வேலூர் காந்தி ரோடு ஜெயின் சங்கம், ஊரீசு கல்லூரி, காட்பாடி காந்திநகர் மாநகராட்சி வார்டு அலுவலகம், குடியாத்தம் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம், பேரணாம்பட்டு இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x