Published : 20 May 2021 03:13 AM
Last Updated : 20 May 2021 03:13 AM

கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கடந்த 2 நாட்களில் - ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 19 பேர் மரணம் : கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தகவல்

கடந்த 2 நாட்களில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் மட்டும் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகக் கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் நேற்று முன்தினம் சிகிச்சையில் இருந்த 22 பேர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது கரோனா வார்டு, அவசர சிகிச்சை பிரிவுகளில் இறந்தவர்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனையடுத்து கூடுதல் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 2,584 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,688 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனை பெற்று வருகின்றனர். மீதமுள்ளோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாகத் தகவல் பரவியது.

கடந்த 2 நாட்களில் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். அதில் 6 பேர் மட்டுமே கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இம்மருத்துவமனையில் சிகிச் சைக்காக வருவோர் நோய் முற்றிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழப்பு அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, கரோனா தொற்று அறிகுறிகள் தென்படும் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்து வமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், நிலைய மருத்துவர் ஞானக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x