

திருநெல்வேலி பேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளர் த.கருத்தப்பாண்டி (54) அடையாளம் தெரியாத கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே மயிலப்பபுரத்தை சேர்ந்த தங்கசாமி மகன் கருத்தப்பாண்டி. பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தில் டாஸ்மாக் மதுக்கூடத்தை நடத்தி வந்தார். முழுஊரடங்கை அடுத்து மதுக்கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கூடத்திலிருந்த ஓய்வறைக்கு நேற்று காலையில் கருத்தப்பாண்டி வந்தார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அவரை அரிவாளால் சராமாரி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் மணிவண்ணன், சேரன்மகாதேவி ஏஎஸ்பி பிரதீப், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் உள்ளிட்ட போலீஸார் அங்குவந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்தப்பாண்டியனுக்கு சொந்தமான ஆடுகள் சமீபத்தில் திருட்டுப்போனது. இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர்மீது சந்தேகம் இருப்பதாக கருத்தப்பாண்டி தெரிவித்திருந்தார். அந்த நபர்களை போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்தநபர்களுக்கும் கருத்தப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த பின்னணியில் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். கொலை செய்துவிட்டு தப்பிய 4 பேர் கும்பலை போலீஸார் தேடுகிறார்கள்.