

ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் இருந்த ஸ்கேன் இயந்திரம் பழுந்தடைந்ததையடுத்து அங்கு புதிய ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மண்டபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் வகையில் ஸ்கேன் மையம் உள்ளது. கரோனா பாதித்தவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை என 5 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை தேவைப்படுவோர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை இயந்திரம் திடீரென பழுதடைந்தது. இதனால் பரிசோதனை மேற்கொள்ள வருவோர் தனியார் மருத்துவமனைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு செலவுடன் அலைச்சலும் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழுதான இயந்திரத்திற்கு பதில் புதிய இயந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அங்கு பரிசோதனை பணிகள் தொடங்கியது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொண்டு நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை பெற்று வருகின்றனர்.