கரோனாவால் பெற்றோர் பாதிக்கப்பட்டால் - குழந்தைகளை பராமரிக்க அரசு நடவடிக்கை :
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பரா மரிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களின் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழல் இருந்தால், பெற்றோர் சிகிச்சை முடிந்து வரும் வரை அல்லது பெற்றோருக்கு இறப்பு நேரிட்டால் அவர்களின் குழந்தைகளை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அரசால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636 001 என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் 0427-2415966, செல்போன் எண் 75026 71771, 98945 18260, 97897 11877, மின்னஞ்சல்:dcpssalem1@gmail.com என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தொன்போஸ்கோ அன்பு இல்ல வளாகம், முள்ளுவாடி கேட், சேலம் - 636 007, தொலைபேசி எண் 0427-2410085 மற்றும்சைல்டு லைன் எண் 1098 (இலவச தொலைபேசி எண்) மற்றும் கிராம / வட்டார / நகர பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
