Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 23,239 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர் : ஆட்சியர் சி.கதிரவன் தகவல்

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 23,239 நபர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27,459 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 23,239 நபர்கள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 4,046 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கைகள் மற்றும் கோபி அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, அந்தியூர் அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் 972 படுக்கைகள் உள்ளன. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 449 நபர்களும், புற நோயாளிகள் 343 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் 180 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுபோல தற்காலிக சிகிச்சை மையங்களிலும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 2,887 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 61 ஆயிரத்து 821 நபர்கள் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 486 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் வட்டார வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மூலம் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து, அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வெண்டும். தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x