Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் :

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று பகல்12 மணி வரை மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் வழக்கம்போல செயல்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைத் தடுக்க இரு வார முழு ஊரடங்கு நேற்று முதல் அமலானது. கடந்த கால முழு ஊரடங்கை விட, இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் காலை முதல் மதியம் 12 மணி வரை செயல்படலாம் எனஅரசு அறிவித்துள்ளது. இதனால்மதியம் 12 மணி வரை பொதுமக்கள்நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் வழக்கம் போல இருந்தது. அனைத்து தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் மூடப்பட்டிருந் தன. ரங்கே கவுடர் வீதியில் ஏராளமான மொத்த விற்பனைக் கடைகள்உள்ளன.

இங்கு நேற்று வழக்கம்போல வியாபாரிகள் கூட்டம் காணப் பட்டது. கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வில்லை.

மதியத்துக்கு பிறகு முக்கிய வர்த்தகப் பகுதிகளான ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜவீதி, காந்திபுரம், டவுன்ஹால், நஞ்சப்பா சாலை, கிராஸ்கட் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாநகரில் காவல் ஆணையர் (பொறுப்பு) அமல்ராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், மாவட்டப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய காரணங்கள் இன்றி சாலைகளில் சுற்றிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் 13 இடங்களில் போலீஸார் தற்காலிக வாகனச் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழக, கேரள எல்லைகளான மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செமணம்பதி உள்ளிட்ட பகுதிகளில் இரு மாநில போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் வாகன நெரிசல்

திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவு சந்திப்பில், வாகனங்களில் நேற்று பலர் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு, வாகனப் போக்குவரத்து இருந்தது.

பின்னலாடை நிறுவனங்கள் மூலமாக முகக் கவசம் மற்றும் கரோனா தடுப்பு முழுக் கவச ஆடைகள், பனியன் அவசர ஆர்டர்கள் உட்பட பல்வேறுகாரணங்களால், திருப்பூர் தொழில்துறையினரின் வலியுறுத்தலின் பேரி்ல் பின்னலாடை துறையை அத்தியா வசிய துறையாக தமிழக அரசு அறிவித்தது. நேற்று காலை முதல் மாலை வரை திருப்பூரில் பனியன் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கின.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைக்கான மளிகை, ஆவின், மருந்து கடைகள் தவிர பிற கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டதால், மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். காலை வேளையில் மக்களின் நடமாட்டம் கணிசமாக இருந்த நிலையில், பகல் 12 மணிக்கு பின் முற்றிலும் குறைந்தது.

போக்குவரத்தை கட்டுப்படுத் தும் வகையில் அனைத்து சாலை களையும் தடுப்புகளை கொண்டு போலீஸார் மூடினர்.

15 பேருந்துகள் இயக்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து செல்லும் அரசுப் பணியாளர்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நேற்று 15 பேருந்துகள் இயக்கப்பட்டன. “வரும் நாட்களில் தேவையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்"என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x