Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ள உள் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ் நேற்று ஆய்வு நடத்தினார். அவருடன் மருத்துவமனை முதல்வர் கே.வனிதா உள்ளிட்டோர் சென்றனர்.
ஆய்வுக்குப் பின்னர், இனிகோ இருத யராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவமனையில் கரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் விவரம் கேட்டறிந்தேன். இங்கு கரோனா தொற்றாளர்களுக்கென 794 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 766 படுக்கைகள் தற்போது நிரம்பியுள்ளன. கூடுதல் தொற்றாளர்கள் வந்தாலும் அனுமதித்து சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் வசதி உள்ள நிலையில், தடுப்பூசிகளும், நோயாளிகளுக்கு வழங்குவதற்கான மருந்து, மாத்திரை களும் தேவையான அளவு இருப்பில் உள்ளன. கரோனா சிகிச்சைப் பிரிவில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்று உள் நோயாளிகள் தெரிவித்தனர். எனவே, அவர்களுக்கு தரமான உணவை வழங்குமாறு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளேன். மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து தேவைகளும் விரைவாக நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT