

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளைமுதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று காலை அறிவித்தது. மேலும், முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளுக்கு நேற்றுகாலை 9 மணி முதல் மதுபானங்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. நேரம் செல்லச் செல்ல மதுபானங்களை வாங்க வருபவர்களின் கூட்டம் அலைமோதியது. மது அருந்துவோருக்கு டோக்கன்வழங்கி டாஸ்மாக் ஊழியர்கள் வரிசையில் நிற்க வைத்தனர். முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால் மது அருந்துவோர் நீண்டவரிசையில் நின்று ஒரு வாரத்துக்குத் தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.