தொற்று அறிகுறி உள்ளவர்கள் - கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் : சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஆட்சியர் ராமன் பேசினார்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஆட்சியர் ராமன் பேசினார்.
Updated on
1 min read

தொற்று அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் சளி தடவல் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் ராமன் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உயர் சிகிச்சைகள் அளிக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பணியாளர்கள், வருவாய்த் துறை, காவல்துறை உள்ளிட்ட இதர துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று அறிகுறி உள்ள அனைவரும் முகாமுக்கு சென்று சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பரிசோதனை முகாம்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் உடல்நலன் தொடர்பான உண்மை நிலையை சுகாதாரப் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், முன்களப்பணியாளர்கள் அனைவரும் கரோனா வைரஸ் தொற்றின் வீரியத்தை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மருத்துவப் பணிகள்இணை இயக்குநர் (பொ) வளர்மதி, சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in