Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

வேலூர் மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை - முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.10,500 அபராதம் வசூல் :

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் மீன் மார்க்கெட் நேற்று காலை 4 மணி முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. பகல் 12 மணிக்குள் கடைகள் மூட வேண்டும் என்பதால் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மார்க்கெட்டில் வியாபாரிகளும் பொதுமக்களும் என பலரும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.

இதற்கிடையில், மீன் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, ஒரு கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டி ருந்தனர். அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையர் உத்தரவிட்டார். மேலும், முகக்கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், பொதுமக்கள் என பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மார்க்கெட் பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

வரும் நாட்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x